மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 127 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 127 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
கரோனா தொற்றால் மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 127 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24,862-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து 22,300 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2,303 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 259 காவலர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.