கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்!
2020 ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் . மேலும், கேப்டன் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஐ.பி.எல்.தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது . இதில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி 2 ல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி, மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த கேப்டனாக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பை வென்ற இங்கிலாந்து அணி கேப்டனாக இயான் மோர்கன் இருந்தது குறிப்பிடத்தக்கது.