சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பேச விருப்பம் இல்லை – டொனால்ட் ட்ரம்ப்
தேர்தல் பிரச்சாரம், கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்பும் மாஸ்க் அணியாத சர்ச்சை என தினம் ஒரு சர்ச்சைக்கு சொந்தக்காரராய் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பேச விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சீனா கையாண்ட விதத்தைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “சமீபமாக சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் நான் பேசவில்லை. எனக்கு பேசுவதற்கு விருப்பமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் கையெழுத்தான அமெரிக்க-சீன ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க தயாரிப்புகளை சீனா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்த ட்ரம்ப், சீன அதிபர் உங்களை தொடர்புகொள்ள முயன்றாரா என்னும் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற ட்ரம்பிடமிருந்து தொற்று பரவும் அபாயம் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சான் கான்லி கூறியுள்ளபோதும், கொரோனா வைரஸ் பரிசோதனையில் ட்ரம்புக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததா என்பதை தெரிவிக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது.
உடனே கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், சீன வைரஸை, தான் முறியடித்துவிட்டதாகவும் தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்திருப்பதால் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.