டெல்லியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசு துணைத் தலைவரை இன்று சந்திக்கிறார்..!
டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலைமை, கொரோனா சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை இன்று சந்திக்கும் பன்வாரிலால் புரோகித், நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசுகிறார்.