மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்; மனுஸ்மிருதி விவகாரத்தில் திருமாவளவனுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மனுஸ்மிருதி பற்றி திருமாவளவன் பேசிய விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டில் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி சிதம்பரம் தொகுதி எம்பி, திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
விசாரணையின் போது, மனுஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை எனவும், மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா என்பதும் தெரியாது எனவும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா குறிப்பிட்டனர். விரிவான விவரங்களோடு தாக்கல் செய்வதற்காக மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது.