பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு..
பீகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் நான்காவது முறையாக இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.
பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட நிதிஷ்குமாரை சட்டப்பேரவைத் தலைவராக கூட்டணி கட்சியினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பாட்னாவில் ஆளுநரை பகு சவுஹானை சந்தித்த நிதிஷ்குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், பதவியேற்பு விழா இன்று நடைபெறும் எனத் தெரிவித்தார். விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிதிஷ்குமார் அமைச்சரவையில் இம்முறை, அதிக அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்தை விட, பாரதிய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால், சபாநாயகர் பதவியையும் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களையும் கேட்டு பெறலாம் எனவும் கூறப்படுகிறது.