(ind vs aus )முதல் இன்னிங்சில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 191 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலிய அணி
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் 15 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், 300 ரன்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். மேத்யூ வேட் (8 ரன்கள்) ஜோ (8 ரன்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ரன்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடுகிறது.