அரசியல்தமிழ்நாடு

சென்னையில் இன்று கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக் குழு கூட்டம் !

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

2018 பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யத்தை துவங்கினார் கமல்ஹாசன். கடந்த மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட ஒருசில கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். தற்போது, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மேலும், கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 700 பேர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்துவது பற்றியும், தேர்தல் பிரசாரம் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.