கோவை தெற்கில் போட்டியிடும் சக போட்டியாளர்களுக்கு கமல் கடிதம்!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் . இதனிடையே கோவை தெற்கில் போட்டியிடும் சக போட்டியாளர்களுக்கு கமல் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டது; தேர்தல் என்பது போர்க்களம் அல்ல, அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல, வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.
கோயம்புத்தூர் தெற்குத்தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்.
எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயக பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாச்சாத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.