மக்களுக்கு உதவி செய்ய “ஒன்றிணைவோம் வா” உடன்பிறப்புகளே – மு.க ஸ்டாலின் அழைப்பு!
பொதுமக்களின் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள், கொரோனா 2வது அலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்குங்கள் என திமுக தொண்டர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதை பற்றி அவரின் அறிக்கையில்; தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசியத் தேவைகளை தி.மு.கழகம் நிறைவேற்றியது.
தற்போது, இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்குங்கள்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வா’ருங்கள் உடன்பிறப்புகளே என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.