தமிழ்நாடு

தண்ணீர்- நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள் கண்மணிகளே – டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்!

தண்ணீர்- நீர் மோர் பந்தல் அமைத்திடுங்கள் கண்மணிகளே என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை பற்றி அவரின் அறிக்கையில்; கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இன்னும் போகப் போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த நோத்தில் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்களையும், நீர் மோர்ப் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன்.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் இருக்கிற கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் மேற் கொண்டிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கண்மணிகளின் இந்தப் பணி, பாதசாரிகளுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இத்தகைய தண்ணீர் மற்றும் மோர்ப் பந்தல்களில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடித்திடுவதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.