80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி – எல்.முருகன்!
80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் மத்திய அரசிற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவது பற்றி மத்திய அரசும், மாநில அரசும் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் 18 வயது மேலானோர் மே 1ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளர்.
இதை பற்றி அவரின் பதிவில்; கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது மேற்பட்டோர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.
மே மற்றும் ஜூன் மாதத்தில் இந்த உதவியை மக்கள் பெற்று கொள்ளலாம். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.