அரசியல்தமிழ்நாடு

தேர்தல் வெற்றி கூட்டத்திற்கு தடை; பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு!

தேர்தல் வெற்றி ஊர்வலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்டுகிறது என தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டும் இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலத்துக்கும் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனால், நேற்று தேர்தல் வெற்றி ஊர்வலத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்டுகிறது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு அளித்துள்ளார்.

இது குறித்து அவரின் அறிக்கையில்; வருகிற மே 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற போதும், நடைபெற்று முடிந்து அறிவிப்புகள் வெளியிடப்படுகின்ற பொழுதும், அரசியல் கட்சியினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கூடி நின்று பட்டாசுகள் வெடிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கொரோனா பரவல் அதிகமாவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்பதால், வாக்கு எண்ணிக்கையின் போது கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை அனைத்து அரசியல் இயக்கத்தினர் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் முடிவுகளின் அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கும் நாம் ஒன்று சேர்ந்து தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு செல்லக்கூடிய முகவர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிபாட்டு முறையை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டு கொண்டுள்ளார்.