திருச்சியில் பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் – வைகோ கோரிக்கை!
திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதை பற்றி அவரின் அறிக்கையில்; திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தொழிற் சாலையில் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.
அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டர், அதாவது 150 உருளைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.