அரசியல்தமிழ்நாடு

பெத்தேல் நகர் மக்களுக்கு மாற்று இடம் தயராக உள்ளது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தப்படாததால், ஐ.ஹெச். சேகர் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், இணைப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களை பொறுத்தவரை, தமிழக அரசால் அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் வீடுகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் மணிசங்கர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மொத்தம் உள்ள 1,436 ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்குவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு ரூபாய் 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 29 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 1,436 ஆக்கிரமிப்பாளர்களின் 926 பேருக்கு வீடுகளுக்கு வழங்க வாரியம் தயாராக உள்ளதாகவும், மீதமுள்ள 510 பேருக்கு இந்த ஆண்டு டிசம்பருக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளதகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், ஆகையால் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வட்டாட்சியர் தாக்கல் செய்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டனர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் விளக்கம் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு தள்ளிவைத்தனர்.