அரசியல்சினிமாதமிழ்நாடு

தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

நடிகர் பூ ராமு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டவர் பூ ராமு. கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், நீர் பறவை, தங்க மீன்கள் ,பரியேறும் பெருமாள், கர்ணன் ,சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . நடிகர் பூ ராமு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள். பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

rrb

தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் பூ ராமு உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இவர் நடிகர் மட்டுமன்றி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.