சாதிக்க துடிக்கும் சைக்கிளிங் வீராங்கனைக்கு 14 இலட்சம் மதிப்பிலான சைக்கிளை வழங்கிய கனிமொழி எம்பி..!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான இவர் மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தினால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களிடம் தனக்கு சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார்.
இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் ஸ்ரீமதி.

இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் “உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்” போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்தியேக சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, ஸ்ரீமதிக்கு 14 இலட்சம் மதிப்பிலான சைக்கிள் மற்றும் அதற்கான ஹெல்மெட், ஷூ உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி இன்று (06/07/2022) புதன்கிழமை, தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஸ்ரீமதிக்கு வழங்கி, மேலும் பல சாதனைகளை படைத்திட தனது வாழ்த்துகளை தெரிவித்தார் கனிமொழி கருணாநிதி எம்பி . இந்தியாவிலேயே இந்த சைக்கிளை பயன்படுத்தபோகும் முதல் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான .கீதா ஜீவன் உடனிருந்தார்.