Covid19தமிழ்நாடு

சீனாவில் இருந்து வந்த 3 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சீனாவில் இருந்து மதுரை வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் 3 பயணிகள் சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். சுகாதார ஆய்வாளர் ஒருவர் இவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த 3 பேரையும் வீட்டில் விட்டு சென்றவர், காரில் சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார். அவர் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம். இந்தி நிலையில் தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும்.

புத்தாண்டு கொண்ட்டாட்டத்திற்கு தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றாலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.