இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி : இந்தியா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த உஸ்பெகிஸ்தான்..!
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுக்குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட doc 1 max என்று இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோ டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த மருந்து. இந்த மருந்தை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்திய போது எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப்பொருள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை அன்றாடம் இந்த மருந்தை அருந்தியுள்ளனர்.
மூன்று முதல் நான்கு முறை இந்த மருந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருந்து கடைக்காரர்கள் பரிந்துரையின் படி பெற்றோர் இந்த மருந்தினை குழந்தைகளுக்கு அளித்துள்ளனர். அனைத்து மருந்து கடைகளிலும் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை திரும்ப அரசு பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அரசின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.