இருசக்கர வாகனங்களில் கும்பலாக பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் – காவல்துறை அதிரடி அறிவிப்பு..!
இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை பல்வேறு புது வியூகங்களை வகுத்துள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் 31.12.2022-ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள். வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, ஒலிபெருக்கிகள் வைக்க கூடாது, நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது, இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கும்பலாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் இதனை உறுதிசெய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
