தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், அவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கூடாது என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காளை அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கக்படாது என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.