இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் : தொடரை வெல்ல இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு..!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடிய போதும் இலங்கை அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது . இப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார் . இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார். பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதையடுத்து கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு அருமையான விருந்தை கொடுத்தார்.
அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார். இதையடுத்து தொடரை கைப்பற்ற இலங்கை அணிக்கு 229 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க விடும்