அரசியல்தமிழ்நாடு

தமிழக முதல்வர் போல் ஆளுநரும் வேகமாக செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் நல்ல திட்டங்கள் கொண்டு வர முடியும் – பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் 90 சதவீத பணிகள் முடிவுற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.

Image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியதாவது : ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அரசை ஊக்கப்படுத்துபவராக இருக்க வேண்டும். அரசு கொண்டு வரும் திட்டங்களை வேகப்படுதுபவராக ஆளுநர் இருக்க வேண்டும். மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார். இதனால், உயர்க்கல்வி பாதிக்கப்படுகிறது, ஆளுநர், அரசின் கோப்புகளை பார்க்காமல் இருப்பது, அப்படி கோப்புகளை பார்த்தாலும் ஏதாவது காரணம் சொல்வது. ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அரசுக்கு ஒத்துழைக்காத ஆளுநரை வைத்துக் கொண்டு தமிழக அரசு எப்படி செயல்படும். முதல்வர் வேகமாக செயல்படுவது போல ஆளுநர் மிக வேகமாக செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் நல்ல திட்டங்கள் கொண்டு வர முடியும் என கூறினார்.