இந்தியா

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘பிபோர்ஜோய்’ புயல்..! அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

நேற்று முன்தினம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் “பிப்பர்ஜாய்” புயலாக மேலும் வலுவடைந்தது.

இது வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.