வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி..? நாளை கடைசி ஒருநாள் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவர்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் நாளையும் விளைாயடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் அணி இருக்கிறது.
இந்த இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் நாளை மோதுவது 142-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 141 ஆட்டத்தில் இந்தியா 71-ல், வெஸ்ட் இண்டீஸ் 64-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி ‘டை’யில் முடிந்தது. 4 ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.