கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம்… ஆளுநர் ஒப்புதல்
குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம், குஜராத் மதச் சுதந்திர திருத்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவின்படி, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, மோசடி செய்து அல்லது பண உதவி அளித்து வேறு மதத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்துகொள்ள வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
சிறுமிகள், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினத்தைச் சோ்ந்தவரை கட்டாயபடுத்தி மதமாற்றத்துக்கு உள்ளாக்கும் நபருக்கு 4 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். ஏதேனும் அமைப்பு கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அந்த அமைப்பின் பொறுப்பாளருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர், கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை குஜராத் மாநில பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா தெரிவித்துள்ளார். மேலும் அவர், விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிரான கடுமையான சட்டத்தையும் கொண்டு வருவோம் எனவும் கூறியுள்ளார்.
