கொரோனா தொற்று அதிகரிப்பால் நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் !
மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகள், நாளை முதல், 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், நாளை முதல், மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகர பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
