தமிழ்நாடு

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது.

தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான எழுத்தாளர் கி.ரா-வுக்கு வயது 99. கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தவர், புதுச்சேரியில் காலமானார் .

இந்நிலையில் இவரது இறுதிச் சடங்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊர் இடைசெவலில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில், நேற்று பிற்பகல் ஒரு மணி வரை உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் கி.ரா-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் அரசு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில், கோவில்பட்டியில் கி.ரா-வுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது நினைவைப் போற்றும் வகையில் படைப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரங்கம் நிறுவப்படும் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அன்னாரது இறுதிச் சடங்கு, புதன்கிழமை முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது .