Covid19தமிழ்நாடு

12ம் வகுப்பு தேர்வை நடத்தினால் பேராபத்து…எச்சரிக்கும் சீமான்

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை வரக்கூடும் என்றும், அது குழந்தைகளை பாதிக்கும் என்றும் கருத்து நிருவப்பட்டுள்ளது. இச்சூழலில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது பேராபத்தினை விளைவிக்க கூடும் ,என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கையில் “கொரோனாவின் மூன்றாவது அலையாக உருமாறிய நோய்த்தொற்று குழந்தைகளை அதிகளவில் பாதிப்பதாகவும், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவிவருவதாக செய்திகள் வெளியாகுகின்றன .இச்செய்தி மக்களிடையே பேரதிர்ச்சியளித்துள்ள்து. கொரோனா இரண்டாவது அலையின் அதீதத் தாக்கத்தாலும், வீரியம் மிகுந்த பரவலாலும், தொற்றுப்பரவலின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாக போய்விட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலை உருவாகியுள்ளது, அதிலிருந்து மீளப் பெரிதும் போராடிக் கொண்டிருக்கும் இச்சூழலில், குழந்தைகளை அதிகளவில் தாக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவலினால் ஏற்படும் பாதிப்புகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில் மிகப்பெரிய இழப்புகளைத் தரும், என அறிவியலாளர்கள் எச்சரித்தது மக்களிடையே அதீத கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராகத் தொடரும் இப்போர் களத்தில், நம்முடைய அடுத்தத் தலைமுறையை இழந்துவிடாதிருக்க, மூன்றாவது அலை எனும் அபாயகர நிலைக்குச் செல்லாது நாட்டையும், மக்களையும் காக்க மத்திய ம்ற்றும் மாநில அரசுகள் மிகுந்த பொறுப்புணர்வோடும்,விழிப்புணர்வோடும் ம்ற்றும் எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டியது மிகப்பெரும் கடமையாகும். மேலும், மக்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியதும், அரசு தகுந்த வழிகாட்டுதல்களை அவர்களுக்குச் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. எனவே, மூன்றாவது அலை பரவாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை, மக்களிடத்தில் உணர வைத்து,அது குறித்த விழிப்புணர்வையும் மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாம் அலை பரவிவரும் நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கான தடையை நீட்டிக்க முன்வரவேண்டும் என்றார்.

கொரோனாவின் இரண்டாவது அலை வடமாநிலங்களில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது, குறைவான தொற்று விகிதம் கொண்ட மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது இந்தியாவிலேயே அதிகப் பாதிப்புள்ள மாநிலமாக மாறியுள்ள சூழல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு உள்ளிட்டப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுவது எவ்வகையிலும் ஏற்ககூடியதல்ல.

மாணவர்களின் எதிர்கால நலன்களைக் மையமாகக்கொண்டு, தற்போதையப் பெருந்தொற்றுச்சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்த முனையும் முடிவு, பேராபத்தினை அடுத்த படி என்பதை உணர்ந்து, அவற்றிலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்குத் தொற்றுப்பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கி, அதைப் பொதுமக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கச் செய்ய அறிவுறுத்துவதும், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளைத் துரிதப்படுத்துவதும் அதை மிக விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதும் இன்றியமையாததாகும்.

ஆகவே, மூன்றாவது அலை எனும் பேரழிவு நம் நாட்டைச் சூழ்ந்துவிடாது தடுக்க விரைவாகவும், விவேகமாகவும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து செயலாற்ற வேண்டும் என்று ,நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என்று கூறி உள்ளார்.