தமிழக பள்ளிகளிலும் மத அடையாள ஆடைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டுமென இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் என்பார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை என குறிப்பிட்டுருந்தார். நாகரிக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் மதத்தின் பெயரால் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது எனவும், கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கோபிநாத் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
