உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி..

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டு உஸ்பெகிஸ்தானில் தொடங்கியுள்ளது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் நரேந்திர மோடி ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்றும் நாளையும், 2 நாட்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்த உறுப்பு நாடுகளாக சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில், தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி சமர்கண்ட் நகரின் முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. அத்துடன் இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ படைகள் மோதிக்கொண்ட பிறகு மோடியும், ஜின்பிங்கும் நேரடியாக பார்த்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். அதேபோல் பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷவாஸ் ஷெரீபுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று தெரிகிறது. மேலும், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை , பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.