இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வென்று கெத்து காட்டியது . இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது .
இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்கவேண்டும் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலனும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின் ஆலன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசிகட்டத்தில் தனது அதிரடியை காட்டிய டேரில் மிட்சேல் இந்திய அணியின் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் . குறிப்பாக அர்ஸ்தீப்சிங் வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் மட்டும் அர்ஸ்தீப் சிங் 27 ரன்களை எதிரணிக்கு பரிசாக வாரி வழங்கினார். மிட்சேல் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ரன்கள் குவித்தார் .
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது
இந்திய அணியின் துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் முறையே 4 மற்றும் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறி கொடுக்க இந்தியா துவக்கத்திலேயே மூன்று விக்கெட்களை இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் ஜகோப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 20 பந்துகளில் 21 ரன்களை அடித்து பிரேஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து இந்தியா 100 ரன்களை குவிக்கும் முன் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 18 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை எடுத்த இந்தியா எட்டு விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து ணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் லூகி ஃபெர்குசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜகோப் டஃபி, இஷ் சோதி ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
