ஆன்மீகம்தமிழ்நாடு

உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 3-ஆம் தேதி தேரோட்டம்..!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருவிழாவின் 3-ம் நாளான 28-ந் தேதி காலை சிம்ம வாகனத்தில், மாலை யாளி வாகனத்தில், 29-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்தில் மாலை கருட வாகனத்தில், 30-ந் தேதி காலை சேஷ வாகனத்தில், மாலை ஹனுமந்த வாகனத்தில், 31-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்தில், மாலை யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 1-ந்தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 2-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி காலை நடைபெறுகிறது.

அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.

நிறைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.